“எங்களது குறிக்கோள் என்னவென்றால், உத்தமமான சந்ததியினரை உற்பத்தி செய்வதும் அவர்கள் மூலம் வலிமையான பாரதத்தைப் படைப்பதும் தான்” என்கிறார் மருத்துவர் கரிஷ்மா மோகன் தாஸ் நார்வானி.
”பெற்றோர் அறிவற்றவர்களாக இருந்தாலும், படிப்பறிவற்ற பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களது குழந்தை அதீத புத்திசாலியாக பிறக்கும். சரியான முறைகளைப் பின்பற்றினால், கருப்பான நிறம் கொண்ட, குள்ளமான பெற்றோர்களுக்கும் கூட நல்ல வெளுப்பு நிறத்திலும் குழந்தை பிறக்கும்; அக்குழந்தை உயரமாகவும் வளரும்” என்கிறார் மருத்துவர் ஹித்தேஷ் ஜனி.
இவர்கள் கர்ப விஞ்ஞான கலாச்சாரத் திட்டத்தின் (Garbh Vigyan Sanskar Project) தேசிய பொறுப்பில் உள்ள மருத்துவர்கள்.
நீங்கள் சந்தேகப்பட்டது சரிதான். இந்த திட்டம் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பான வித்யா பாரதியின் துணை அமைப்பான ஆரோக்கிய பாரதியினுடையது. மேற்படி திட்டத்தின் நோக்கம் ’உத்தம சந்ததி’ ஒன்றை உருவாக்குவது. உத்தம சந்ததி என்பதை முன்வடிவமைக்கப்பட்ட குழந்தைகள் (Designer Babies) என்று சரியாக புரிந்து கொள்ளலாம். இவ்வாறான ’உத்தம சந்ததியை’ உற்பத்தி செய்ய இவர்கள் பின்பற்றச் சொல்லும் வழிமுறைகள் என்ன?
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் எங்கள் கிராமத்து ஆலமரத்தடிக்கு எப்போதாவது ஒரு ‘மருத்துவர்’ ஒருவர் வருவார். சுற்றிலும் மூலிகைகளைப் பரப்பி வைத்துக் கொண்டு “ஒருமண்டலம் சுயமைதுனம் செய்யாமல் விரதமிருந்து பின் மனைவியின் மாதவிலக்காகிய 12-ம் நாள் அவரோடு கூடினால் பிறக்கும் குழந்தை பெரும் அறிவோடு பிறக்கும்” என்று நீட்டி முழக்குவார். ஒருவேளை உங்களால் ‘சுத்தபத்தமாக’ இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர் முன் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் மூலிகையில் ஒன்றை ஐந்தாயிரம் கொடுத்து வாங்கித் தின்றால் (தேனில் கலந்து; அந்த தேனையும் அவரிடம் ஆயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டும்) அதே அளவுக்கு பலன் கிடைக்கும் என்று அடித்து விடுவார். கூட்டம் அதிரும். அதிலும் ஒற்றைப்படை நாட்களில் கூடினால் பெண் குழந்தைகளும், இரட்டைப்படை நாட்களில் கூடினால் ஆண் குழந்தைகளும் பிறக்குமென கொளுத்திப் போடுவார் (பெண் குழந்தைகளால் அறிவாளி ஆகவே முடியாதோ).
அந்த ஆலமரத்தடி வில்லேஜ் விஞ்ஞானியின் இன்றைய வடிவம் தான் ஆரோக்கிய பாரதி.
சரி,அது என்ன உத்தமமான சந்ததி? அதை எப்படி உருவாக்கப் போகிறார்கள்?